search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைவர்கள் வாழ்த்து"

    • இறைத்தூதர் முகமது நபிகள் நாயகம் பிறந்தநாள் அனைவராலும் மிலாதுநபி பண்டிகையாக கொண்டாப்படுகிறது.
    • சர்வசக்தியும் படைத்த இறைவன் தனக்கு துணையாக நிற்கும்போது எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையை அனைவரின் மனதிலும் விதைத்தவர் நபிகளார்.

    சென்னை:

    மிலாது நபி திருநாளையொட்டி தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மிலாது நபி வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு "மிலாதுன் நபி" நன்னாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    "நம்பிக்கைக்குரியவர்", "அடைக்கலம் அளிப்பவர்", "வாய்மையாளர்" எனப் பொருள்படும், "அல் அமீன்" எனும் சிறப்புப் பெயர் கொண்டு அவர்மீது அன்பு கொண்ட பொதுமக்களால் அழைக்கப்பட்ட நபிகள் பெருமானார், ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக்கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாக விளங்கினார்.

    "ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்" என்ற மகத்தான மனிதநேயத்திற்குச் சொந்தக்காரரான அண்ணல் நபிகளாரின் சீரிய போதனைகளும், சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவை மட்டுமின்றி. அவை பொன்னேபோல் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை!

    அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்தநாளாகிய "மிலாதுன் நபி" நன்னாளை இஸ்லாமிய மக்கள் மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக முதன்முதலாக, கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1969-ம் ஆண்டிலேயே அரசு விடுமுறை நாளாக அறிவித்துச் செயல்படுத்தினார். ஆனால், அந்த மிலாதுன் நபி நாள் விடுமுறையை 2001-ல் அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது. தி.மு.க. அரசு மீண்டும் 2006-ல் அமைந்தவுடன், மிலாதுன் நபித் திருநாளுக்கு "அரசு விடுமுறை" வழங்கியது.

    என்றைக்கும் சிறுபான்மையின மக்களின் உற்ற தோழனாக-உரிமைப் பாதுகாவலனாக விளங்கும் திராவிட முன்னேற்றக்கழக அரசுதான், அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இஸ்லாமியர்க்கு மூன்றரை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை நல்கி, தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் காத்து நிற்கிறது.

    மேலும், உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கியது, வக்பு வாரிய சொத்துக்களைப் பராமரிக்க முதன்முதலாக மானியம் வழங்கியது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் தொடங்கியது, உருது அகாடமியைத் தொடங்கியது, கண்ணியத்துகுரிய காயிதே மில்லத்துக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி, இடம் ஒதுக்கியது, காயிதே மில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கியது, காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் கொடுத்தது என தி.மு.க.வும் கலைஞரும் இஸ்லாமிய சமுதாயத்துக்காகச் செய்த திட்டங்களையும் சாதனைகளையும் பட்டியலிட்டுக்கொண்டே இருக்கலாம்.

    இந்த ஆழங்காற்பட்ட பேரன்பின் தொடர்ச்சியாகத்தான் நமது திராவிட மாடல் அரசிலும், சிறுபான்மையினர் விடுதியில் பண்டிகைகளுக்குச் சிறப்பு உணவு; உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு; சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் கட்டப்பட நிதி ஒதுக்கீடு; தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கான நிர்வாக மானியம் அதிகரிப்பு; பள்ளி வாசல்கள், தர்க்காக்கள், வக்பு நிறுவனங்கள் பழுது பார்ப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் மானியம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

    அண்ணல் நபிகளாரின் நற்போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மிலாதுன் நபி நன்னாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்து மகிழ்கின்றேன்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

    அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நன்நாளாம் ''மிலாதுன் நபி'' திருநாளில், உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ''எளியோர்களிடம் கருணை காட்டுங்கள். சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள்; பசித்தவர்களுக்கு உணவு அளியுங்கள்'' என்பது இறைத்தூதர் நபிகள் நாயகம் உலகிற்கு எடுத்துரைத்த போதனைகளாகும்.

    அன்பு இருந்தால் தான் பிறர்க்கு உதவ முடியும் என்பதனை உறுதியாக நம்பி, அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும், அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:

    இறைத்தூதர் முகமது நபிகள் நாயகம் பிறந்தநாள் அனைவராலும் மிலாதுநபி பண்டிகையாக கொண்டாப்படுகிறது. இந்நன்னாளில் அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி நிறைய நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரது வாழ்வு செழிக்கவும், வளரவும், அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும், மகிழ்ச்சி நிறையவும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மிலாது நபி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

    இறை தூதரான நபிகள் நாயகம் தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய வரலாற்றுப் பெருமைமிக்கவர். நபிகள் நாயகம் பிறந்தநாள், மிலாது நபி திருநாளாக உலகம் முழுவதும் வாழ்கிற இஸ்லாமிய பெருமக்களால் மிகுந்த பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் மிலாது நபி வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

    1400 ஆண்டுகளுக்கு முன்னர் இம்மண்ணுலகில் தோன்றிய மகான் நபிகள் நாயகம் ஒட்டுமொத்த மனித குலத்தையும் நல்வழிப்படுத்த மகத்தான நன்னெறிகளைப் போதித்தார். இறையச்சத்தின் மூலமே மனிதகுலத்தை நல்வழிப்படுத்த இயலும் என்பது அவரின் நம்பிக்கையாகும். இறைவனுக்கு மட்டுமே அஞ்சுதல் வேண்டும் என போதித்த நபிகள் நாயகம் வேறு எதற்காகவும் அஞ்சிட தேவையில்லை என்றும்; குறிப்பாக, மனிதனுக்கு மனிதன் அஞ்சவே கூடாதென்றும் போதனைகள் வழங்கினார்.

    சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் விசிக சார்பில் மிலாதுநபி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

    அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் அண்ணல் நபிகள் நாயகம்.

    இந்த உண்மையை உணர்ந்து உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று நபிகள் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    பா.ம.க. தலைவவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:

    மாற்றங்களை நிகழ்த்திக்காட்டிய இஸ்லாமியர்களின் வழிகாட்டி முகமது நபியின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, உலகில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அவர் திகழ்ந்தார். இறை நம்பிக்கை, பாவ மன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண் சிசுவதைக்குத் தடை என்ற குரானின் பாடங்களை இஸ்லாமியர்களுக்கு நபிகள் நாயகம் போதித்தார்.

    காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்:

    நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தநாளில் மத நல்லிணக்கம் தழைத்தோங்கி, மனித குலம் ஒற்றுமையாக வாழவும் வளம் பெறவும் பிரார்த்திப்போம். இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட இந்த இனிய நாளில் அன்புடன் உளமாற வாழ்த்துகிறேன்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    சர்வசக்தியும் படைத்த இறைவன் தனக்கு துணையாக நிற்கும்போது எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையை அனைவரின் மனதிலும் விதைத்தவர் நபிகளார் அவர்கள். வீரம், தியாகம், ஒழுக்கம், தூய்மையான அரசியல், யாருக்கும் அஞ்சாமை உள்ளிட்ட எண்ணற்ற சிறப்புகளுக்கு சொந்தக்காரராகவும் நபிகள் நாயகம் திகழ்ந்தார்.

    உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சமுதாயத்தில் சமாதானமும் சகோதரத்துவமும் தவழ வேண்டும் என்ற அண்ணல் நபிகளின் போதனைகளை ஏற்று அவரது வழியில் அயராது உழைத்திட உறுதியேற்போம்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இறைவன் முகமது நபிகள் வழியாக வெளிப்படுத்தினார் என்று நம்பப்படுகிறது. நபிகள் அதனை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு வெளிப்படுத்தினார். எல்லா தீர்க்கதரிசிகளிலும் மிகவும் சிறந்தவராக முகமது நபிகள் போற்றப்படுகிறார். உலகில் வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் மிலாடி நபி வாழ்த்துக்கள் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    வி.கே.சசிகலா:-

    நற்பண்புகளை போதித்தது மட்டுமல்லாமல், அதன்படி வாழ்ந்தும் காட்டிய இறை தூதர் நபிகள் நாயகம் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழும் இந்நன்னாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மிலாது நபி நல்வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • உழைப்பே உயர்வு தரும், மனநிறைவு தரும், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.
    • மே தினத்தின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட மே தினத்தில் சூளுரைப்போம்.

    சென்னை:

    நாளை (மே 1) தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

    உடலினை எந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்கள் வருடத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    உழைப்பே உயர்வு தரும், மனநிறைவு தரும், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில் எனது நெஞ்சார்ந்த மே தின வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:

    1886-ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு 'எட்டு மணி நேர வேலை' கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியதுதான் மே தினம் உருவானதற்கான அடித்தளம். உழைப்பின் உயர்வை நன்கு உணர்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மானிட சமுதாயத்தில் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தினரே முதன்மையானவர்கள் என முழங்கினார்.

    தமிழ்நாட்டில் எட்டு மணி நேர வேலைக்கு ஆபத்து வந்தவுடன் அதற்கு எதிராக குரல் கொடுத்த இயக்கம் எங்கள் இயக்கம்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

    தொழில் வளர்ச்சி குன்றிய நிலையில் ஏற்பட்ட வேலை இழப்பினால் தொழிலாளர்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிற நிலையில் தங்களது உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1-ந் தேதி அமைய வேண்டும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:

    தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்கவும், தொழிலாளர் விரோத போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மே தினத்தில் உறுதி ஏற்போம்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:

    மே தினத்தையொட்டி, தொழிலாளத் தோழர்களின் வருங்கால வாழ்வு சிறக்க இறைவன் துணை நிற்க வேண்டி, த.மா.கா சார்பில் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்:

    நாட்டிலேயே முதன் முறையாக 1923-ஆம் ஆண்டு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சென்னையில் செங்கொடியை உயர்த்தி மே தினத்தை கொண்டாடிய 100-வது ஆண்டு நிறைவுப்பெறுகிறது. 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்ற மே தின முழக்கத்தை பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. மே தினத்தின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட மே தினத்தில் சூளுரைப்போம்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:

    1884 முதல் 1889 வரை உலக அரங்கில் நடைபெற்ற தொழிலாளி வர்க்கத்தின் புரட்சியின் நீட்சிதான் இந்த மே தினம்.

    தொழிலாளர் வர்க்கத்திற்குச் சவால்கள் நிறைந்த இச்சூழலில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி எடுப்போம்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:

    உலகளாவிய பொருளாதாரம், பெரு நிறுவனங்களின் பணி சூழலில் 8 மணி நேர வேலை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட உரிமைகள் தொழிலாளர்களுக்கு தடையின்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதுதான் தொழிலாளர்களுக்கான உண்மையான மே தின கொண்டாட்டமாகும்.

    சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன்:

    வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மே தின நினைவாக அப்போதைய முதலமைச்சர் காமராஜர் சென்னை மெரினா கடற்கரையில் 1959-ம் ஆண்டு உழைப்பாளர் சிலை நிறுவ பாடுபட்டார். சென்னை மெரினாவிலுள்ள உழைப்பாளர் சிலை, இந்திய உழைப்பாளர்களின் வரலாற்று அடையாளமாக இன்றும் திகழ்ந்து வருகிறது.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:

    உழைப்பில்லையேல் உயர்வில்லை, உழைப்பாளிகள் இல்லையேல் உலகில் இயக்கம் இல்லை. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளித்து அவர்கள் வாழ்வு வளம் பெற செய்வது அரசின் கடமை.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன்:

    உலகமெங்கும் வாழும் தொழிலாளர்களின் இன்னல்கள் தீர்ந்து ஒற்றுமையுடனும் ஒருமைபாட்டுட னும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் பங்களிப்பு மகத்தானது இந்த நாளில் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதே போல் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோரும் மே தின வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    • அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர், அரச வாழ்வை துறந்து, தமது செல்வத்தையெல்லாம் மக்களுக்கு தானமாக வழங்கியவர்.
    • மகாவீரர் விரும்பியவாறு மது இல்லாத உலகம், அன்பு நிறைந்த மக்களை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    சென்னை:

    மகாவீரர் ஜெயந்தி விழாவையொட்டி தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி:-

    பீகார் தலைநகர் பாட்னா அருகில் அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர், அரச வாழ்வை துறந்து, தமது செல்வத்தையெல்லாம் மக்களுக்கு தானமாக வழங்கியவர். அகிம்சையை கடைபிடிக்க வேண்டும், கொல்லாமையும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை மக்களுக்கு விளக்கி, அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர். அவரது பிறந்தநாளை கொண்டாடும் இந்நாளில், தமிழகத்தில் அவரின் போதனைகளை பின்பற்றி வாழும் ஜைன சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    துறவறத்தின் அடையாளமாக போற்றப்படும் மகாவீரரின் பிறந்தநாளைக் கொண்டாடும் சமண மத சகோதரர், சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-

    மனிதர்களை மட்டுமின்றி, உலகின் அனைத்து உயிரினங்களையும் மதித்த மகாவீரரின் பிறந்தநாளைக் கொண்டாடும் சமண மத சகோதரர், சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காமல் வாழ்ந்து காட்டிய மகாவீரரின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த நன்னாளில், அவரின் போதனைகளை பின்பற்றி வாழவும், அவர் விரும்பியவாறு மது இல்லாத உலகம், அன்பு நிறைந்த மக்களை உருவாக்கவும் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • இயேசுபிரான் விரும்பியதைப் போல உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்.
    • போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் விழா நாளை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    அன்பின் திருஉருவம், கருணையின் மறுவடிவம், தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் அன்பு காட்டி, இறைவனின் தூதுவராக, கருணையின் வடிவமாக விளங்கிய இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    அனைத்து மக்களோடும் இரண்டறக் கலந்து சமூக சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டவர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தினர். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் என பல அளப்பரிய பணிகளின் மூலம் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட விளிம்புநிலையிலுள்ள மக்களுக்கு, பாதுகாவலாக கிறிஸ்துவ மதம் விளங்குகிறது.

    மிகச்சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    இயேசுபிரான் விரும்பியதைப் போல உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும். உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    இயேசு நமக்கு வழங்கிய போதனைகளின்படி, உலகில் அன்பு மட்டுமே அனைவரையும் ஆட்சி செய்வதை உறுதி செய்வோம். இந்த உலகில் இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    இயேசு கிறிஸ்து போதித்த மனிதநேய நெறிகளைப் போற்றிப் பின்பற்றவும், சாதி-சமய வேற்றுமைகளைக் கடந்து சகோதரத்துவம், தமிழகத்தில் மேலோங்கவும் கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளில் உறுதி கொள்வோம். உலகெங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்நன்னாளில், கிறிஸ்தவப் பெருமக்களுக்கு ம.தி.மு.க. வின் சார்பில் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையானது ஒற்றுமையை, அமைதியை வலியுறுத்துகிறது. அந்த வகையில் கிறிஸ்தவர்கள் அனைவரிடமும் அன்போடு, ஒற்றுமையாக நட்புறவோடு பழகுவது தனிச்சிறப்பு. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும், இயேசுவை வரவேற்கும், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    அன்பையும், பொறுமையையும் மனித சமுதாயத்திற்கு போதித்த இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இயேசுநாதரின் சொற்களை மனதில் நிறுத்தி அனைவரிடமும் அன்பு செலுத்திடுவோம். உலகெங்கும் அமைதி நிலவி, மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட கிறிஸ்துமஸ் நாளில் நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இயேசு போதனைகளை பின்பற்றி, உலக மக்களிடையே சகோதரத்துவமும், சமாதானமும் கருணை எண்ணமும் தழைத்தோங்கட்டும். கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழும் உலகெங்கும் வாழும் மக்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    இயேசுவின் போதைகளை ஏற்று அமைதியாகவும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அன்பு பாராட்டி, பிறருக்கு உதவி செய்து, மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்து தனிமனித ஆசையை அடக்கி வாழ்ந்தால் உலகில் மனித குலம் செழிக்கும். இயேசுவின் போதைகளை ஏற்று நாமும் கடைபிடித்து வாழ்ந்திட அவர் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் நாளில் உறுதி ஏற்போம்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    தமிழகத்திலே சிறுபான்மையினரால இருக்கக் கூடிய கிறிஸ்தவ மக்களுக்கு தமிழக அரசு அரணாகவும் பாதுகாப்பாகவும் இருந்து கொண்டிருக்கிறது. அனைவரும் இயேசு போதித்த அன்பை மனதில் கொண்டு அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    வி.ஜி.பி. குழும தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம்:-

    இயேசு நாதர் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் நாளாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த காலம் அன்பின் காலம், கிருபையின் காலம் என்று அழைக்கப்படுகிறது. இயேசுவானவரின் பிறப்பின்போது வான தூதா்கள் "பூமியிலே சமாதானமும், மனுஷா்மேல் பிரியமும் உண்டாவதாக"-என்று கூறி கடவுளைத் துதித்தார்கள். அந்த வாழ்த்துக்கள் இன்றும் உலக மக்களுக்கு ஆசீா்வாதமாக அமைந்துள்ளது. இந்த இனிமையான கிறிஸ்துமஸ் காலத்தின் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன்:-

    நம் பொருளாலும் ஞானத்தினாலும் இவ்வுலகில் இருக்கும் எல்லோரையும் சுமக்க இந்த கிறிஸ்துமஸ் நாளில் உதித்த எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவராக இந்த கிறிஸ்துமஸ் நாளில் இயேசு வழங்க வந்த அத்தனை பாக்கியங்களும் உங்கள் மீது வருவதாக.

    இவ்வாறு அவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    மேலும் வாழ்த்து தெரிவித்தவர்கள் விவரம்:-

    காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் எம்.எல்.ஏ.,

    ×